யாழில் அம்பியூலன்ஸை கண்டு பதறியோடிய பக்தர்கள்!

03.05.2021 15:52:17

யாழ்.தென்மராட்சி பகுதியில் கோவில் திருவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள், அம்பியூலன்ஸைக் கண்டதும், சிதறியோடிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மீசாலை வேம்பிராய் கல்லடி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவத் தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது, கொவிட் 19 சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை மீறி பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அது தொடர்பில் அறிந்து கோவிலுக்குச் சென்ற பொலிஸார், சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை பேணி திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தியதுடன் , 50 பக்தர்கள் மாத்திரம் திருவிழாவில் கலந்துகொள்ள முடியும் எனவும் ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை அடுத்து 50 பேருடன் தேர் திருவிழா நடைபெற்றது. ஏனையோர் அருகில் இருந்த வயல் வெளிகளில் சிதறி நின்றிருந்தனர். 50 பேருடன் தேர் இழுத்து, தேர் இருப்புக்கு வந்ததும் பொலிஸார் கோவிலில் இருந்து வெளியேறிச் சென்ற பின்னர் மீண்டும் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் கூடினார்கள்.

அந்நேரம் அப்பகுதி வீதியில் அம்பியூலன்ஸ் வந்துள்ளததை கண்ணுற்ற கோவிலில் நின்ற பக்தர்கள், சுகாதாரப் பிரிவினரை பொலிஸார் அழைத்து வருவதாக நினைத்து, அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

எனினும், குறித்த அம்பியூலன்ஸ் அப்பகுதி ஊடாக வேறு இடத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.