தீபக் சாஹர் அபார பந்துவீச்சு : முதல் வெற்றியை ருசித்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி !

17.04.2021 09:55:31

 

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மைதானத்தில் நடைபெற்ற நேற்று (வெள்ளிக்கிழமை) இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷாருக்கான் 47 ஓட்டங்களையும் ஜெய் ரிச்சட்சன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார் 4 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன், மொயின் அலி மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென்னை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி 46 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில், 4 விக்கெட்டுகளை சாய்த்த தீபக் சஹார் தெரிவுசெய்யப்பட்டார்.