நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்

18.04.2023 06:54:46

யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து நாளை இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்

சில தினங்களுக்கு முன்னர் பண்ணை சுற்றுவட்டப் பகுதிக்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரால் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம் மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை(18)யாழ்ப்பாண நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் நல்லை ஆதீன மண்டபத்தில் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்காது இரகசியமாக இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கலந்துரையாடலில் ஈடுபட்டோர் அதன் நிறைவில் பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணியம்மன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வழிபட்டனர். இதன் போது அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.