தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

22.04.2021 10:39:44

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவிக்கையில், ‘மருத்துவ பயன்பாட்டுக்கு அதிகளவான  ஒக்சிஜன் கிடைக்கச் செய்யும் வகையில், மிகச் சில தொழிற்சாலைகள் தவிர, பிற தொழிற்சாலைகளுக்கான ஒக்சிஜன் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

கொரோனா விடயத்தில் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க, வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா என்னும் பெரிய சவாலை எதிர்கொள்ளும்போது, சில சமயங்களில் அச்சமும், குழப்பமும் ஏற்படலாம். இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.