எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் – ஜனாதிபதி கோட்டாவிற்கு அவசர கடிதம்

05.06.2021 10:09:59

எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த விடயம் தொடர்பாக அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த கப்பலில் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட குழு நேற்று கப்பலுக்கு அருகே சென்று பார்வையிட்டிருந்ததுடன் இதுவரை 13 பேரிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கின்றது.

இதேவேளை, கப்பலின் தீவிபத்தை அடுத்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் என கரையொதுங்கிய 300 டொன் கழிவுகள் இதுவரை சேகரிக்கப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவிக்கின்றது.

அதேபோல, கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீக்கிரையாகி, தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுமையான விசாரணையொன்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு குறிப்பிட்டு உயர் நீதிமன்றில் நேற்றைய தினத்தில் அடிப்படைய உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.