கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது

13.01.2021 10:38:40

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது.

அதேபோன்று தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.