முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு!

09.03.2023 21:27:47

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம்.

அந்த பயணத்திற்கு வழிகாட்டவும், தலைமைத்துவத்தை வழங்கி ஆலோசனைகளை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

 

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எனது ஆட்சி காலத்தில் ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சீனாவிடமிருந்து 9 சதவீத வட்டிக்கு கடன் பெறப்பட்டது.

 

மோசடி செய்வதற்காகவே அவர்கள் இவ்வாறு கடன் பெற்றனர். இவ்வாறு இவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் இன்று நாம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றோம்.

இறுதியில் அரசாங்கமே தம்மை வங்குரோத்தடைந்த நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. உலகில் தாம் வங்குரோத்தடைந்துள்ளதாக அறிவித்துள்ள மிகக்குறைவான நாடுகளில்இலங்கையும் ஒரு நாடாக இடம்பிடித்துள்ளது.

உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்தது மாத்திரமே, இதனைப் போன்ற பலவற்றையும் நாம் செய்திருக்கின்றோம். வெற்றிகரமாக பெற்றுக் கொண்ட அனைத்தையும் இன்று இழந்திருக்கின்றோம். இவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறன்றி மீண்டும் ராஜபக்ஷாக்கள் காலத்தில் ஏற்கனவே ஒரு யுத்தத்தினை வெற்றி கொண்டுள்ளோம். மீண்டுமொரு யுத்தத்தை வெற்றி கொள்வோம் எனக் கூறுவார்கள்.

அதனை நம்பி ஏமாந்து விடக் கூடாது. நாட்டின் இன்றைய நிலைமைக்கு குறிப்பாக மக்கள் பொறுப்பு கூற வேண்டும். இதில் பிரதானமாக தவறிழைத்தவர்கள் பொது மக்களாவர். சரியாக ஆராய்ந்து பார்க்காமல் 69 இலட்சம் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.

இந்த வீழ்ச்சியை முற்றாக சரி செய்வதற்கு 25 - 30 ஆண்டுகளாவது செல்லும். எனவே குறைந்தபட்சம் இப்போதிருந்தாவது நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

கட்சி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். அதற்கு தலைமைத்துவம் வகிக்கவும் , வழிகாட்டவும் , ஆலோசனைகளை வழங்கவும் நான் தயாராகவுள்ளேன்.

எனவே தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்படும் பொய்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது. வாக்கு கேட்பவர்கள் கூறும் வாக்குறுதிகளை நன்று ஆராய்ந்து, அவர்களால் அவற்றை நிறைவேற்ற முடியுமா? அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை நன்கு அறிந்து சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.