ஒரே கட்சியாக இணைந்தே நாட்டுக்கு சார்பான முடிவுகளைஎடுக்கின்றோம்

18.04.2021 10:31:51

நாட்டுக்கு சார்பான முக்கியமான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் துறைமுக நகரம் தொடர்பாக நாட்டில் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இதுவரை ஒரு விவாதத்தையும் நடத்தவில்லை.

ஆனாலும் இது தொடர்பாக இலங்கை சுதந்திரக் கட்சி, எதிர்காலத்தில் விவாதங்களை நடத்தும்.  மேலும் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆதரவான ஒரு முடிவையே எடுக்கும்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் கொழும்பு துறைமுக நகரத்தில், தனி பொலிஸ் படை இருக்குமென எதிர்க்கட்சி கூறுகிறது.

அதாவது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செயற்பாடுகளை முன்னெடுக்க அல்லது தனி சட்டம் இயற்றப்படுதல் ஆகியவற்றுக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது. அத்துடன் ஜனாதிபதி அத்தகையதொரு செயற்பாட்டை முன்னெடுப்பார் என்று நாங்கள் கருதவில்லை.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய மாத்திரமே விரும்புகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.