சிறிலங்கா கடற்படைக்கு காணி சுவீகரிப்பு

04.04.2023 20:57:26

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படை முகாமுக்கு, காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற சிறிலங்கா கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்திய சம்பவமும் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 

தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் இன்றைய தினம், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் நிரந்தரமாக கடற்படை முகாமை அமைப்பதற்காக, காணி சுவீகரிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்பு

ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு ஜே/56 தம்பாட்டியில் உள்ள இறங்குதுறையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கும் நோக்கில் குறித்த இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த பிரதேச மக்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.