இந்த ஆண்டுக்குள் 5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

02.06.2021 09:51:47

2021ஆம் ஆண்டுக்குள் 05 மில்லியன் டோஸ் ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் முதல் தொகுதியை அனுப்பி வைப்பதாக ஃபைசர்-பயோஎன்டெக் அரசுக்கு தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

எனவே ஜூலை மாதத்தில் முதல் தொகுதி தடுப்பூசியைப் பெற அரசு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சிறப்பு ஊடக சந்திப்பின்போது பேசிய அவர், முதல் தொகுதி 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை ஃபைசர் தடுப்பூசியைக் கொண்டிருக்கும் என தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனைக் குழு மே 7ஆம் திகதி இலங்கையில் ஃபைசர் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

ஐந்து மில்லியன் டோஸ் தடுப்பூசி அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அப்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.