கடலுணவு ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்

21.03.2023 22:25:12

கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி உரியமுறையில் பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வோர் தற்போதைய நிலையில் எதிர்கொண்டுள்ள சவால்கள், மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கான வருமானம் தொடர்பாக, கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (21.03.2023) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடலுணவு ஏற்றுமதி

இதன்போது, வெளிநாடுகளில் இருந்து மீன்களை வரவழைத்து மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் உள்ளூர் மீன் தட்டுப்பாடு நிலவும் வேளையில் தமது தொழிலை சீராக பேண சந்தர்ப்பம் வழங்குமாறு ஏற்றுமதியாளர்கள் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த கடற்றொழில் அமைச்சர், எமது நாட்டைச் சுற்றி கடல்வளமும் நாட்டினுள் நீர்வேளாண்மைக்கு ஏதுவான சூழலும் நிறைந்திருக்கும் நிலையில், தேவையான கடலுணவுகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், எவ்வாறெனினும் குறித்த கோரிக்கை தொடர்பாக விரிவாக கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேபோன்று பல நாள் மீன்பிடிப்படகுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, நியாயமான - நிலையான விலையை நிர்ணயித்துக்கொள்ளுமாறும் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடலுணவு பாதுகாப்பு

மேலும், பலநாள் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி கலன்களில் கடலுணவுகளை பாதுகாக்கும் பொருட்டு, தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.