சிதைத்து தூக்கி வீசப்பட்ட ஆதிசிவன்

28.03.2023 22:49:37

கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமான வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடுக்குநாரி எனும் பகுதியிலே நீண்ட காலமாக வரலாற்று ரீதியிலே சைவத்தமிழ் பாரம்பரியத்தோடு ஆதி சிவனை வழிபட்டு வந்த மூதாதையரும் அந்த பரம்பரையும் அந்த மண்ணில் இருக்கின்றார்கள்.

அவ்வாறான வெடுக்குநாரி சிவனாலயமும், அந்த சிவனாலயத்தின் பரிபாலன தெய்வங்களான அம்மன், பிள்ளையார், வைரவர் போன்ற கடவுள்களுடைய சிலைகளும் அடித்து உடைத்து சிதைக்கப்பட்டிருந்ததை நாங்கள் நேற்று பார்த்தோம்.

நீதிமன்ற உத்தரவு

அந்த ஆலயத்தை பூசித்தும், பராமரித்தும் வந்த பூபால் ஐயா, ஏனைய பூசகர்கள் மீதும்  பிக்குமாரும், தொல்பொருள் திணைக்களமும் அவ்விடத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

 

அதனையடுத்து வெடுக்குநாரி மலை என்பது தொல்பொருள் திணைக்களத்திற்குரியதென்றும், அங்கு யாரும் பிரவேசிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு அமைவாக அந்த ஆலயத்தை பூசித்தும், பராமரித்தும் வந்த பூபால் ஐயாவும், ஏனைய பூசகர்களும் அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் நீதிமன்ற கட்டளையை மதித்து நடந்தார்கள்.

இவ்வாறு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளித்து அவர்கள் அந்த இடத்திற்கு செல்லாது இருந்தபொழுது, அந்த இடத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் அவ்விடத்திலிருந்த ஆதி சிவனுடைய சிவலிங்கத்தையும், அம்மன், பிள்ளையார், வைரவர், முருகன் சிலைகளையும் சிதைத்து தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

சட்டத்தை மீறிய கட்டடம்

 

இது இந்த நாட்டில் மிகவும் கேவலமான செயல். தாங்கள் செய்த கர்மா என்பது கோட்டபாயவின் காலத்தில் அவருக்கு வெளிப்பட்டிருந்தது. அதனைத்தாண்டி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும் கரும வினைகளை அவர்கள் சந்திக்கப்போகின்றார்கள்.

இது தெய்வ அனுகிரகத்திற்குட்பட்ட விடயம். ஏற்கனவே குருந்தூர் மலையில் ஒரு விகாரையை கட்டக்கூடாது என முலை்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.