உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்

02.06.2021 10:24:05

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு யோகிபாபு பட தயாரிப்பாளர் ஒருவர் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதே சமயம், 

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருப்பதோடு, கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலைகளில் வாழ்பவர்கள் போதிய உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், உணவின்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னையில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு இலவசமாக மூன்று வேலை உணவு வழங்கி வருகிறார். இசைத்துறையில் பல வருட அனுபவம் பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம் கம்பெனி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

அந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பவர், முதலாவதாக யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில், பிரபல இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறார்.