ரசிகர்களுடன் படம் பார்த்த பின் சூரி

13.01.2021 11:30:41

மதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.

மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்தார். படம் முடிந்த பின் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது: தியேட்டருக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எல்லா துறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அதிலும் சினிமா துறை ரொம்பவும் பாதிக்கப்பட்டது.

தற்போது விஜய், சிம்பு படம் மூலம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. அதிக நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. ஒரு காலகட்டத்தில் நாம் வெளியே வந்துதான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் அரசு கூறும் கொரோனா தடுப்பு விதிகளையும் ரசிகர்களும், பொதுமக்களும் இருக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ? அதே அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாஸ்டர் படம் மாஸ் ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.