மேலும் பல அமைப்புக்களுக்கு விரைவில் வரவுள்ள தடை !

15.04.2021 16:05:13

நாட்டில் மேலும் பல அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் அமைப்புக்கள் இருப்பதாகவும் அவற்றையும் விரைவில் தடை செய்யப் போவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கையில்,  ஐ.எஸ்.ஐ.எஸ், அல் குவைதா, சூப்பர் முஸ்லிம் என ஏற்கனவே 11 அமைப்புக்கள் இலங்கைளில் தடை செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மேலும் பல அமைப்புக்களும், அதேபோல நபர்களும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அவர்களையும் தடைசெய்ய உள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து பேசுவோர், பணம் சேகரிப்போர் என அதற்கு மறைமுகமாக ஆதரிப்போருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்களைக் கொண்டுவரும் யோசனை விரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது மேலும் தெரிவித்தார்.