ஒரேநாளில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது !

23.04.2021 09:55:29

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 503 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 62 இலட்சத்து 57 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 36 இலட்சத்து 41 ஆயிரத்து 606 தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 24 இலட்சத்து 28 ஆயிரத்து 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 256 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.