ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை

09.04.2021 11:11:45

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில், இந்தக் குழு நேற்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் நியமனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ரொமேஸ் களுவிதாரண, ஹேமந்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு.கர்னைன், திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 11ஆம் திகதி தடுப்பூசியின் முதல் அளவும், மே 25ஆம் திகதி இரண்டாவது அளவும் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக சொந்த மண்ணில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.