கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று !

04.05.2021 10:27:05

இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி முதல் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 54 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில், 98 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளதுடன், 709 பேர் மரணித்துள்ள நிலையில் இன்னும் 14 ஆயிரத்து 771 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணித்தவர்களுள் 449 பேர் ஆண்கள் எனவும் 260 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களுள் 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.