மனித உரிமைகளை மதிப்பதைப் பொறுத்து இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் அமைந்துள்ளது – அமெரிக்கா

24.03.2021 07:07:16

இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் எதிர்காலத்திற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இன மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானத்தை அமெரிக்கா இணைந்து வழங்கியது.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இன மற்றும் மத சிறுபான்மையினர், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதன் கடந்த காலத்தை நிவர்த்தி செய்ய நம்பகமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கான அறிக்கையிடல் தேவைகளை விரிவுபடுத்துவதாகவும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஆணையை உள்ளடக்கியதாகவும் கடந்த ஆண்டு போக்குகள் குறித்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் ஜலினா போர்ட்டர் கூறியுள்ளார்.