சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த மகேந்திரன்... குவியும் வாழ்த்துக்கள்

09.05.2021 11:49:02

சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசு விருதை பெற்றார்.

இதைத் தொடர்ந்து ‘பரம்பரை’, ‘கும்பகோணம் கோபாலு’, விஜய் நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’, ரஜினியுடன் ‘படையப்பா’, அஜித்துடன் ‘முகவரி’, பிரபுதேவாவுடன் ‘நெஞ்சிருக்கும் வரை’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த மகேந்திரன் ‘விழா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.