கொரோனா அச்சுறுத்தல் : மட்டக்களப்பு - கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

14.05.2021 10:09:26

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள வேலாப்பொடி வீதி, கண்ணனி அம்மன் ஆலய வீதி, நெசவு நிலைய வீதி,  மற்றும்  கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள  விதானையார் வீதி, லோக்றோட் வீதி, அப்புகாமி வீதி ஆகியன இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கணவதிப்பிள்ளை கருணாகரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய தேவைகள் அன்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுமாறும் அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.