
பெண்களுக்கு இலவச பஸ் பயண சலுகை
ராஜஸ்தானில் வருகிற மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று அரசு பஸ்களில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் விரைவு உட்பட அனைத்து அரசு பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தன்று சுமார் 8.50 லட்சம் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பஸ்களில் பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.7.50 கோடி நிதிச்சுமையை மதிப்பிட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சாதாரண அரசு பஸ்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத சலுகையை 50 சதவீதமாக உயர்த்தும் திட்டத்திற்கும் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சலுகை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3.50 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.