ஓட்டமாவடியில் 17 கொரோனா சடலங்கள் அடக்கம் -மட்டக்களப்பு

07.03.2021 08:02:46

 

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நேற்று வரையில் 17 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று வரையில் 17 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில், இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில், கொவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.

மேலும் இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.