1000 ரூபாய் நிவாரணப் பொதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு..

04.06.2021 10:38:09

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதோச நிவாரணப் பொதி ‘சஹான் மல்ல’ வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் என தெரிவித்தார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் மூலம் நிவாரணப் பொதிகளை வழங்க பல வாகனங்கள் வழங்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அதிக ஆபத்து மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே கொழும்பு மாவட்டத்திலும் இன்று முதல் கம்பஹா மாவட்டத்துக்கும் சதோச நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பத்து அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களைக் கொண்ட தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகள், பயணக்கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.