‘மாஸ்டர்’ வருவாரா.... மாட்டாரா? - குழப்பத்தில் கோலிவுட்

07.01.2021 10:35:44

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பின்பு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று நிபந்தனையும் விதித்தது. இதனால் திரையுலகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. 

 

பெரிய படங்கள் வெளியாகவில்லை. வெளியான சிறிய படங்களுக்கும் போதிய வரவேற்பு இல்லை. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகளும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலா ளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதன் காரணமாக பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்ப நிலை நீடிக்கிறது. திரையுலகினரும் குழம்பிப்போய் உள்ளனர். ஒருவேளை அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ‘மாஸ்டர்’ பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.