பெங்களூர் அணி நடப்பு சம்பியனை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது !

10.04.2021 10:31:22

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஆரம்ப போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் 49 ஓட்டங்களையும் சூர்ய குமார் யாதவ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சால் பட்டேல் 5 விக்கெட்டுகளையும் ஜேமீசன் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டி வில்லியர்ஸ் 48 ஓட்டங்களையும் கிளென் மேக்ஸ்வெல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஹர்சால் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.