தேர்தலை நடத்த வேண்டாமென கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை: சஜித்!

04.03.2023 16:04:31

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டாம் என கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அக்மீமன பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலில் முறைகேடு செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதுவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.