ரி-20: சிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி !

24.04.2021 11:20:50

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், சிம்பாப்வே அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-1 என்ற கணக்கில் சிம்பாப்வே அணி சமநிலை செய்துள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கமுன்ஹூகாம்வே 34 ஓட்டங்களையும் சக்காப்வா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னெய்ன் மற்றும் டேனிஷ் அஸிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பஹீம் அஷ்ரப், ஹர்சாட் இக்பால், ஹரிஸ் ரவூப் மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் சிம்பாப்வே அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 41 ஓட்டங்களையும் டேனிஷ் அஸிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், லூக் ஜோங்வே 4 விக்கெட்டுகளையும் ரியான் பர்ல் 2 விக்கெட்டுகளையும் பிளெஸிங் முஸரபானி மற்றும் ரிச்சர்ட் ன்கார்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லூக் ஜோங்வே தெரிவுசெய்யப்பட்டார்.