ஓடிடி தளம் தொடங்கிய நமீதா

06.05.2021 10:25:31

 

புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு தனது ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நமீதா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் மக்களிடையே ஓடிடி தளங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

மேலும், புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் என கூறியுள்ளார். நமீதாவின் இந்த புதிய ஓடிடி தளம் அடுத்தமாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாம்.