விரைவில் வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தித் தருமாறு மக்கள் போராட்டம் !

21.02.2021 09:57:34

தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தித் தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அரசியல் என்பது மக்களுக்கானது எனவும், எந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த பழனி திகாம்பரம் தலைமையில் 2018 ஒக்டோபர் ஏழாம் திகதி பிரவுன்ஸ்வீக், குயின்ஸ்லேன்ட் பிரிவில் 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பின்னர், நிர்மாணப் பணிகளும் பகுதியளவில் ஆரம்பமாகின. ஒன்பது வீடுகளுக்கு பகுதியளவு சுவர்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒப்பந்தக்காரர்களால் வீட்டுத் திட்டம் அவ்வாறே கைவிடப்பட்டது. இது தொடர்பாக பயனாளிகள் ‘ட்ரஸ்ட்’ நிறுவனத்திடம் பல தடவைகள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பகுதி காடாகி வருகின்றது. இந்நிலையிலேயே வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து விரைவில் முழுமைப்படுத்துமாறு கோரி பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.