மாறன் மறைவுக்கு பா.இரஞ்சித் இரங்கல் -உன் மகள் அழுகிறாள்... தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை

12.05.2021 10:05:07

நடிகர் மாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாறன். இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், கொரோனாவால் மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் மாறன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக் கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை. நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாஞ்சா கண்ணன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.