வைத்தியரின் வீடு புகுந்து வவுனியாவில் தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது !

07.03.2021 08:04:49

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு கடந்த 1ஆம் திகதி அன்று அதிகாலை 12.30 மணியளவில் வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த அவர்கள் இருவரினதும் கைத்தொலைபேசி, பேஸ், மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சீசீரீவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்து சென்றுள்ளதுடன் வீட்டில் இருந்த தொலைகாட்சி, சீசீரிவி என்பவற்றையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்னளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததில் நேற்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.