ரிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

03.05.2021 10:57:24

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதிய சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (02) காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், ரிசாட் பதியுதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனை அடைகின்றோம். அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னி மாவட்டத்திலே முன்னெடுத்தவர். எனவே அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரை திருப்திப்படுத்த இந்த கைது, சர்வதேச உறவுகளே அவரின் விடுதலைக்காய் குரல்கொடு, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.