நில நடுக்கம் - யாழ்ப்பாணத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

26.02.2023 00:02:52

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம்

அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இமயமலையில் உள்ள தர்மசாலாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் 3.6 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன,“ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்துள்ளது. இதன்போது அந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியே வந்துள்ளனர்.

முந்தைய நிலநடுக்கத்தை விட பல மடங்கு வலிமையானது

இம்முறை நடுக்கம்  ரிக்டர் அளவில் 8 ஆக அதிகரிக்கும். முந்தைய நிலநடுக்கத்தை விட பல மடங்கு வலிமையானது. நாம் உணரும் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கும். இதற்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இந்த அதிர்வை உணர முடியும். துருக்கி-சிரியா நிலநடுக்கக் கோட்டில் இந்தியாவின் இந்தப் பகுதியும் உள்ளது. நடுக்கங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாம். அதிர்வுகள் சிறிது நேரம் உணரப்பட்டு நொடிகளில் ஏற்படக்கூடிய அழிவு மிகப்பெரியது.

எனவே நீங்கள் நிலநடுக்கத்தால் அதிர்வை உணர்ந்தால் கட்டடங்களில் தங்க வேண்டாம். சமவெளிகளில் பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுங்கள்.”என கூறியுள்ளார்.

அனுமானம்

இதேவேளை இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம தெரிவிக்கையில், "நிலநடுக்கங்களை அப்படி அனுமானிக்க முடியாது. இன்றும் நாளையும் வரும். பொதுவாகவே ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரும் என்று ஒரு அனுமானம் உள்ளது.

இந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிவோம். இது சமீபத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் துருக்கியில் நடந்துள்ளது. எந்த வித அனுமானத்தை வைத்தும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கூற முடியாது.”என தெரிவித்துள்ளார்.