நாளை பாகிஸ்தானை வயிட் வோஷ் செய்யுமா நியூஸிலாந்து!
பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் பாகிஸ்தான் அணிக்கு மொஹமட் ரிஸ்வான் அல்லது பாபர் அசாம் தலைமை தாங்கவுள்ளனர்.
கை பெருவிரலில் ஏற்பட்ட லேசான எலும்பு முறிவால் முதலாவது டெஸ்டில் ஒதுங்கியிருந்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் நேற்று நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று அணி மருத்துவ குழு கூறினால் மட்டுமே இந்த டெஸ்டில் விளையாடுவார். ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான் தொடர்ந்து அணித்தலைவராக செயற்படுவார்.
இதுதவிர நியூஸிலாந்து அணியில், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னருக்கு பதிலாக மெட் ஹென்ரி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பொறுத்தவரை முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியில் 101 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.