ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 250-8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட்

01.04.2021 11:27:05

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், பெத்தும் நிஸங்க 49 ஓட்டங்களுடனும் லசித் எம்புல்தெனிய ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை அணி 104 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற் இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 354 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 126 ஓட்டங்களையும் ராகிம் கோர்ன்வோல் 73 ஓட்டங்களையும் மேயர்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ, லசித் எம்புல்தெனிய, மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன 1 ஓட்டத்துடனும் லஹிரு திரிமன்னே 55 ஓட்டங்களுடனும் ஒசே பெனார்டோ 18 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும் நிரோஷன் டிக்வெல்ல 20 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் 6 ஓட்டங்களுடனும் துஷ்மந்த சமீர 2 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெமார் ரோச், செனோன் கெப்ரியல், கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஜெரமைன் பிளக்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை, இலங்கை அணி இன்று தொடரவுள்ளது.