இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது தேர்தலை எதிர்கொள்ளப் போகிறதா ?

08.04.2021 09:49:32

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது தேர்தலிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு மீண்டுமொரு தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த மாதம் நான்காவது முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதேபோல் நெதன்யாகுவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ருவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நெதன்யாகுவுக்கு 28 நாட்களள் காலக்கெடு விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்குள் நெதன்யாகு ஆட்சியமைக்க தவறும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என உரிமை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சி அமைக்க ஜனாதிபதி ருவன் ரிவ்லின் அழைப்பார்.

அவ்வாறு யாரும் உரிமை கோரவில்லை என்றால் மீண்டும் பொது தேர்தலை நடத்த ஜனாதிபதி ருவன் ரிவ்லின் உத்தரவிடுவார்.