பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ்

23.02.2023 08:01:35

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் முறையிட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது. இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச்செலயாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.