கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் -அவசர நிலை அறிவிப்பு ! - புளோரிடா

06.04.2021 08:42:00

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள அதிவேக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.

பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல இலட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் கசிந்து வருகிறது.

கழிவு நீர் கசிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நச்சு கலந்த நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.