டெல்லி துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா!

28.02.2023 16:56:09

டெல்லி துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் திடீரென தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

 

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது டெல்லி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இருவரின் ராஜிநாமா கடிதத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தது.

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜிநாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இருவரின் ராஜிநாமா கடிதங்களையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.