ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - பாகிஸ்தான் பிரதமரின் வருகை !

23.02.2021 07:04:31

பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேநேரம், இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.