முக்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் விலகல் - ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு

14.04.2021 09:21:13

நடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான தனது தொடக்க லீக் போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

தற்போது அந்த காயத்தின் தன்மை மிக மோசமாக இருப்பதால், மருத்துவக் குழுவின் அறிவுரைக்கு அமைய அவர் நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இம்முறை புதிய இயக்குனர், அணித்தலைமை, புதிய வீரர்கள் என பல கனவுகளுடன் நடப்பு தொடருக்குள் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, நட்சத்திர வீரரான ஸ்டோக்ஸின் இழப்பு கடும் பின்னடைவாகும்.

பென் ஸ்டோக்சுக்கு பதிலாக டேவிட் மில்லர் அல்லது லியாம் லிவிங்டோன் ஆகிய இருவரில் ஒருவர் அணிக்குள் உள்வாங்கப்படுவார்கள் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த தொடரில் தனது தந்தையின் உடல்நலக் குறைவால், ஆறு லீக் போட்டிகளை பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டிருந்தார்.

இதேவேளை மற்றொரு வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்செர், உபாதைக்காரணமாக இன்னமும் அணிக்கு திரும்பவில்லை. தற்போது அவர் வலைப்பயிற்சிக்கு திரும்பியிருந்தாலும் எப்போது அணியுடன் இணைவார் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை.