கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் அசைக்கமுடியாத பலத்தில் மாநிலக் கட்சிகள் !

03.05.2021 15:46:01

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட, கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்குமான இறுதிக்கட்ட முடிவுகளின் படி, சி.பி.எம். கூட்டணி 95 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி ஒரு தொகுதியையும் ஏனைய கட்சிகள் மூன்று தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன.

இதன்படி, தற்போதைய முதல்வர் பினராயி விஜயம் தலைமையிலான சி.பி.எம். கூட்டணி மீண்டும் ஆட்சியை்க கைப்பற்றுகிறது.

இதேவேளை, மேற்கு வங்காளம் மாநிலத்தில் 292 தொகுதிகளுக்குமான இறுதிக்கட்ட முடிவுகளின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 216 இடங்களையும் பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் ஏனைய கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றுகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்களாத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும். அங்கு தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.